Tuesday, May 18, 2021

காஞ்சி பெரியவரின் கடைசி நிமிடங்கள்

 

அப்போதெல்லாம் எனக்கு பெரியவா என்றால் ஒரு துறவி, மடாதிபதி, பீடாதிபதி என்ற அளவுக்கு தான் தெரியும். மற்றபடி அவரைப் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் எப்படி என்னை ஆட்கொண்டார்னு இன்னிக்கு வரைக்கும் யோசிச்சு பார்க்கிறேன். முடிவு தெரியலை. தெய்வத்தின் குரல் படிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அவரோட பழகினவங்க, அவருடன் இருந்தவங்க அப்படின்னு நிறைய பேர்களை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொருவரும் கூறிய அனுபவங்களில் இருந்தும் சில பகுதிகள்



மறக்கமுடியாத அந்த துவாதசி.....


கண்களில்  நீர் வற்றாத ஒரு  நாள் வாழ்க்கையில் உண்டு என்றால் எனக்கு அது  1994 ஜனவரி 8 


 அன்று காஞ்சியில் என்ன நடந்தது  கண்ணீர்  வற்றாமல் வடிய?


வழக்கமாக  ஏகாதசி உபவாசம்  முதல் நாள். அருகில் இருந்த ஒருவர்  சொல்கிறார்: 


''பெரியவா கொஞ்சம் கஞ்சியாவது  பருகணும் .  ராத்திரி பூரா  உடம்பிலே ட்ரிப்ஸ் ஏற்றி இருக்கு. அவருக்கு கொஞ்சநாளாகவே  தேஹ நிலை  சரியில்லை.  அருகிலேயே  தொண்டர்கள்  படுத்திருந்தார்கள்.  கையில் ட்ரிப்ஸ் ஏற்றிய தால்,  நான் அவர்  கையை பிடித்துக்கொண்டே  இருந்தேன். டாக்டர்கள் ஸ்ரீதரும்  பாஸ்கரும்  அருகிலேயே இருந்தார்கள்.  


அடுத்தநாள் துவாதசி.   அனுஷம். ஜென்ம நக்ஷத்ரம் வேறு.   காலை 3 மணிக்கே  முழிப்பு கொடுத்துவிட்டது.  முதல் நாள் நடந்தது  எதுவுமே நடக்காதது போல்  அவர்  சுறுசுறுப் பாக இருந்தார். குரல் ஈனஸ்வரமாக இல்லை. உரத்த குரல் வழக்கம்போல.  எல்லோரையும்  பேர் சொல்லி அழைக்க   நினைவு ஆற்றல் மங்கவில்லை. 


''பசிக்கிறதுடா..'


'கொஞ்சம் கஞ்சி  உள்ளே சென்றது.  பூஜ்ய ஜெயேந்திரர், பெங்களூர்  ஹரியயோடு வந்தார்.  நமஸ்கரித்தார்.  


''பூஜை பண்ணியாச்சா?'


'''இனிமே தான் ஆரம்பிக்கப்போறேன்''- ஜெயேந்திரர்.


''பூஜையை விடப்படாது'


'பெங்களுர்  ஹரி கையில் வெள்ளிப் பாதுகைகள்.  அதோடு  மஹா பெரியவாளின் அப்பா அம்மா படம்.  பாதுகைகளில் பாதங்களை நுழைத்தார்.  பெரியவாளால்  படத்தில் இருக்கும் பெற்றோரரை அடையாளம் காண இயலவில்லை..  படிக்கும் கண்ணாடியை கழற்றி விட்டு வழக்கமான பார்வை கண்ணாடி யை அணிவித்தார்கள். பெற்றோர் படத்தை கண்ணருகே வைத்து தரிசித்தார். தன்னோடு அணைத்துக் கொண்டார்.


''பாதுகை  எங்கே'


'''பெரியவா பாதங்களிலேயே இருக்கு '


'கால்விரல்களால்  பாதுகையை கெட்டியாக இறுக்கிக்கொண்டார்.  ஹரி நமஸ்கரித்து  விடை பெறுகிறார். பெரியவா தனது கைகளால்  பாதுகையை கழற்றி  அவர் கைகளில் அளிக்கிறார். பெற்றோர் போட்டோவையும் அவரிடமே திரும்ப தருகிறார்.  அவை  இரண்டு மே  பெரியவா ஜென்மஸ்தலமாகிய   ஈச்சங்குடிக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கே  பூஜா கிரகத்தில்  ஸ்தாபிதம் செய்யப்பட்டது பின்னால் நடந்த விஷயம்.


ஜெயேந்திரர் பூஜை முடித்து திரும்பினார் . பெரியவாவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு அவரும்  விஜயேந்திரரும்  சென்னையில் நடந்த எதோ ஒரு கூட்டத்திற்கு   புறப்பட்டார்கள் 


 ஸ்னானம் முடிந்தது.  சாய்வு நாற்காலியில் அமர்ந்து  தரிசனம் தந்தார்.   அனுஷம் என்பதால் பெரிய கூட்டம். பிரதோஷம் மாமா, அவர் மனைவி, மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்  அனுஷம் பிரசாதம் அளித்தனர்.  தீர்த்தத்தை தனது சிரசில்   ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டார். விபூதியில் நெற்றியில் அணிந்தார். 


'' சங்கர ஜெயந்தி ஏற்பாடுகள் எப்படி நடக்கிறது?' அந்த பேச்சு கூட வார்த்தைகள் தெளிவாக வரவில்லை.


'''பெரியவா அனுகிரஹத்திலே  எல்லாம் நன்னா நடக்கிறது'' --  மேச்சேரி பட்டு சாஸ்திரிகள். பெரியவாளுக்கு சாஸ்திரிகள் சொன்னது சரியாக காதில் விழவில்லை போலும். மேலும் கீழும் சாஸ்திரிகளை பார்த்தார். மீண்டும் ஒரு முறை சாஸ்திரிகளிடம் கேட்க சாஸ்திரிகள் அபிநயத்துடன் எல்லாம் நன்னா நடக்கிறதுன்னு சொன்னார்.


இந்த செயதியை சொல்பவர்  துவாதசி  ஆகாரத்தை பெரியவாளுக்கு   ஸ்ரீகண்டனோடு சேர்ந்து  தயார் செய்தவர்.  பெரியவா திருப்தியாக  பிக்ஷை   (பாயசம், பாதம் ஹல்வா,  புல்லரிசி  வாழை இட்லி)எடுத்துக் கொண்டு மற்றவர்களை எல்லாம் பார்த்து 


''எல்லோரும் நன்றாக  சாப்பீட்டீர்களா?'


' என வினவுகிறார். கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றதால்  வைத்தா மாமா, அரக்கோணம் பாலு  இருவரும் கால்களை பிடித்துக்கொள்ள, பாலு தோளை  தாங்கியவாறு தூக்கி செல்கிறார்கள்.  உட்கார வைக்கும்போது கால்களை உதறுகிறார். மூன்றுபேரும் விழுகிறார்கள்.

 

மஹா பெரியவா இனி இல்லை.


''பெரியவாளை படுக்க வையுங்கோ '' டாக்டர் பாஸ்கர்  அவசரப்படுகிறார்.  மற்ற டாக்டர்களும் ஓடி வந்தனர்.  பரிசோதித்து கண்களில் ஏக்கத்தோடு 


 ' மஹா பெரியவா சித்தி அடைஞ்சுட்டா'' என  ஊர்ஜிதம் செய்தார்கள்.   பரமேஸ்வரன் விடைபெற்று சென்றுவிட்டார்.


செய்தி பறந்தது. அவரை தெரிந்த, அறிந்த, பக்தர்கள் அனைவரும் துடிதுடித்து போயினர். பலர் செய்தி கேட்ட அடுத்த நிமிடம் அதிர்ச்சியில் மயங்கினர். ஒரு சிலரோ இது பொய்யாக இருக்க வேண்டும் என பிரார்த்தித்தனர்.  இரு பெரியவர் களும் திரும்பி காஞ்சி வந்து  பாதங்களில் விழுந்து  துக்கம் தாளாமல் கதறினார்கள்.


ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பட்டு சாஸ்திரிகளிடம்


 ''பெரியவா போய்ட்டா'' என்று சொன்னவருக்கு பளார் என்று ஒரு அறை  '. அவர் அந்த மாதிரி ஒரு அறையை இதுவரை வாழ்க்கையில் வாங்கினது கிடையாது.


'இப்போ தானேடா பார்த்துட்டு வரேன். அப்படி அபசகுனமா சொல்லாதே''  


உண்மை என அறிந்து குடும்பத்தோடு காஞ்சிக்கு ஓட்டம். காஞ்சியில்  கடைசி தரிசனத்துக்கு   ஜன வெள்ளம். முஸ்லிம்கள் நமாஸ் ஓத, கிறித்தவர்கள்  மலர் வளையம் கொண்டுவந்தார்கள்.  எல்லோராலும் விரும்பப்பட்ட,  மதிக்கப்பட்ட மஹாத்மா அல்லவா?  பிரதோஷ காலம், அனுஷம், துவாதசி, கிருஷ்ண பக்ஷம் உத்தராயண புண்யகாலம்.  சந்யாசிக் கான அந்திம கிரியைகள் நடந்தது, சமாதி , அதிஷ்டானம் எழும்பியது  எல்லாம் தான் நாம் அப்புறம் அறிந்தோமே.


இனி இப்படி ஒரு மகானை, பீடாதிபதியை, மடாதிபதியை, துறவியை, சாதுவை நாம் காண்பதற்கு எத்தனை யுகங்கள் காத்துக் கொண்டிருக்கணுமோ அந்த பரமேஸ்வரனே அறிவார்.



No comments:

Post a Comment